"காரணங்களை பட்டியலிட, கல்வியியல் கருத்தரங்குகள் உதவும்"
"காரணங்களை பட்டியலிட, கல்வியியல் கருத்தரங்குகள் உதவும்"
UPDATED : நவ 10, 2014 12:00 AM
ADDED : நவ 10, 2014 12:53 PM
சென்னை: இந்தியாவில், 751 பல்கலைகள் இருந்தும், ஒன்றுகூட உலக தர வரிசை பட்டியலில் இடம்பெறவில்லை. அதற்கான காரணங்களை பட்டியலிட, கல்வியியல் கருத்தரங்குகள் உதவும், என, தமிழ்நாடு அரசு முதன்மை செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா பேசினார்.
751 பல்கலைகள்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில், உயர் கல்வியில் தனித்துவ நிலை, சமத்துவம், திறன் மேம்பாடு என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.
அதில், தமிழ்நாடு அரசு முதன்மை செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா பேசுகையில், "இந்தியாவில், 751 பல்கலைகள் இருந்தும், ஒன்று கூட உலக தர வரிசை பட்டியலில் இடம்பெறவில்லை. அதற்கான காரணங்களை பட்டியலிட, இந்த மாதிரியான கல்வியியல் கருத்தரங்குகள் உதவும். அந்த காரணங்களை கண்டறிவதோடு மட்டுமல்லாமல், கல்வி நிறுவனங்களும், அரசும், தர மேம்பாட்டிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.
அதில், பிரிட்டிஷ் பல்கலையின் பேராசிரியர் கிளிப்டன் சாட்விக் பேசுகையில், "பண்டை காலந்தொட்டு, உலகம் முழுவதும் கல்வி கற்பிப்பது என்பது, மனப்பாட திறனை உயர்த்துவதாகவே இருந்து வந்தது. அதன் அடிப்படையில், வாசித்தல், எழுதுதல், எண்ணியல் சார்ந்த கணக்குகளை கையாளுதல் போன்ற திறன்களையே, கல்வி நிறுவனங்கள் வளர்த்து வந்தன.
தற்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், மாணவர்களுக்கு, மனப்பாடம் சார்ந்த கல்வியை கற்பிப்பது மட்டும் போதாது; உலகளவில், உயர்கல்வியில், பல நாடுகளுடன் போட்டியிட்டு முன்னேற வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் உள்ளனர். தற்காலத்திற்கேற்ப நடைமுறை அறிவை கற்பிப்பதாய் கல்வி அமைய வேண்டும்" என்றார்.
புத்தகங்களாக வெளியீடு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன், பல்கலையும், தகவல் தொழில்நுட்பங்களும் என்ற தலைப்பில் பேசினார். கருத்தரங்கில், கருத்தரங்க ஆய்வு கட்டுரைகள், மூன்று தொகுதிகள் அடங்கிய புத்தகங்களாக வெளியிடப்பட்டன.

