UPDATED : அக் 19, 2009 12:00 AM
ADDED : அக் 19, 2009 12:46 PM
எம்.பி.ஏ., மாணவர்களின் வேலைதேடும் படலம் தொடர்பாக சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இன்றைய வர்த்தக சூழ்நிலையில் வேலை தேடும் போது அவர்கள் எவ்வித நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதுதான் ஆய்வின் நோக்கம். மொத்தம் 1,700 எம்.பி.ஏ., மாணவர்கள் பங்கேற்ற இவ்வாய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் 37 சதவீதத்தினர் ஒரு நிலைக்குப் பின் தங்கள் சுயவிவரப் பட்டியலில் பொய்யான தகவல்களை அளிக்கின்றனர். 26 சதவீதத்தினர் தங்கள் பணி அனுபவம், பல்வேறு நிறுவனங்களில் செய்த செயல்திட்டங்கள் குறித்த பொய் யான தகவல்களையும், 6 சதவீதத்தினர் தங்கள் கல்வித் தகுதிகள் பற்றி பொய்த் தகவல்களையும், 63 சதவீதத்தினர் இத்தகைய பொய்த் தகவல்களுக்கு தாங்கள் வேலை தேடிப்போகும் நிறுவன ஊழியர்களின் தகவல்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எம்.பி.ஏ., மாணவர்கள், ஐ.ஐ.எம்., ஐ.எஸ்.பி., எம்.டி.ஐ., எப்.எம்.எஸ்., போன்ற உயர்தர மேலாண்மை பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்கள் என்பதுதான் நம்மை அதிரவைக்கிறது. 28 வயதுடைய ஒரு எம்.பி.ஏ., மாணவர் தனது பணி அனுபவம் 20 ஆண்டுகள் என்று சான்றிதழ் கொடுக்கிறார்.
இது தவிர, தான் முன்பு பணியாற்றிய நிறுவனம், பதவி, வேலையின் தன்மை இவற்றில் மிகைப்படுத்தலைத் தொடர்ந்து இம்மாணவர்கள் செய்து வருகின்றனர்.
இது போன்ற குற்றங்கள் வெளிநாடுகளிலும் நடக்கத்தான் செய்கின்றன என்றாலும், அவர்கள் இதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இந்தியாவில், வேலைக்குச் சேர்பவர்கள் தரும் தகவல்கள் உண்மையா பொய்யா என்று பெரும்பாலான நிறுவனங்கள் சரிபார்ப்பதில்லை. 2 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தகவல்களைச் சோதனை செய்கின்றன.
ஐ.டி., தொழிலில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் பணியில் சேர்ந்த பின்பும் தங்கள் ஊழியர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குக் கண்காணித்து வருகின்றன. மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கண்காணிப்பு தீவிரமடைந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
