UPDATED : செப் 08, 2023 12:00 AM
ADDED : செப் 08, 2023 09:36 AM
சென்னை:
தேசிய பயிற்சி முகாமில், ஐ.டி.ஐ., படித்தவர்களை தொழில் பழகுனராக தேர்வு செய்ய உள்ளனர்.மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் மத்திய அரசு, தென் மண்டல திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு இயக்கம் ஆகியவை இணைந்து, தேசிய தொழில் பழகுனர் பயிற்சி முகாமை நடத்துகின்றன. ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கான இம்முகாம், வரும் 11ம் தேதி காலை 9:00 மணிக்கு, வடசென்னை, ஆர்.கே., நகரில் உள்ள அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.இதில், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்றவர்களை, தொழில் பழகுனர் பயிற்சி வழங்க தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதாந்திர உதவித்தொகையாக, 8,000 ரூபாயும், தேசிய சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சி முகாமில் சேர விரும்புவோர், www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் அருணா தெரிவித்தார்.
