UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 05:16 PM

ஸ்ரீவில்லிபுத்தூர்:
கல்லூரி மாணவிகளை தவறாக (பாலியல் குற்றம் செய்ய) முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள், முடிந்தநிலையில், இன்று (ஏப்.,29) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எனக்கூறி விடுதலை செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விபரம் நாளை (ஏப்.,30) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேல்முறையீடு
சிபிசிஐடி வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில், இருவரை விடுதலை செய்தது தொடர்பாக மேல்முறையீடு செய்வோம். கருப்பசாமி, முருகனுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள், தற்போது பிறழ் சாட்சியாக மாறியுள்ளனர் என்றார்.