UPDATED : பிப் 10, 2025 12:00 AM
ADDED : பிப் 10, 2025 07:28 PM
தங்கவயல்:
தங்கம் மட்டுமல்ல, தமிழின் பொன்மன செல்வம் நிறைந்த இடமும் தான் கர்நாடகாவின் தங்கவயல் தான். தமிழிலக்கிய பெருமைகளை நிறைவாக காணலாம். இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. ஆனால் காலத்தின் சூழல், தமிழ்ப்பள்ளிகளை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிற மொழியை தாய் மொழியாகக்கொண்டவர்களும் கூட முதல் மொழியாக தமிழை படித்த காலமும் உண்டு. இங்கு எத்தனையோ எழுத்தாளர்கள், இலக்கிய பேச்சாளர்கள், நாடக கலைஞர்கள் என தமிழறிஞர்கள் வாழ்ந்தனர்.
தமிழ் மணம்
சைவ, வைணவ மத வழிபாடு அனைத்தும் தமிழில் தான் இருந்தது. தற்போதும் தொடர்கிறது. ராமாயணம், மகாபாரதம் பகவத் கீதை பஜனைகள், தேவாரம், திருவருட்பா, திருவாசகம், திவ்விய பிரபந்தம் என எல்லாமே தமிழால் செவிக்கு விருந்தாக கிடைக்கிறது. கிறிஸ்தவ வேதாக வசனம், கீர்த்தனைகள், புத்த அறநெறி உபதேசத்திலும் கூட தமிழ் மணமே வீசுகிறது.
இதனால் தான், தங்கவயலில் இப்போதும் அள்ள அள்ள குறையாத தமிழிசையை இனிக்க கேட்க முடிகிறது. தங்கவயலுக்கு வராத தமிழறிஞர்களே இருக்க முடியாது. தமிழுணர்வின் ஊற்று பூமியாகவே உள்ளது.
இத்தகைய தங்கவயலில், கென்னடிஸ் 4 வது வட்டத்தில் பிறந்தவர் தான், முனைவர் பரிமள சேகர். தமிழுணர்வில் மூழ்கிய இவர், தமிழகத்தின் திருச்சி தேசியக்கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றியவர்; இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதுவரை இவர், 30 நுால்களை எழுதி உள்ளார். அவைகளை வானதி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.
இவர் எழுதிய நுால்கள்
* இதயத்தின் உதயம் ஐகூ கவிதை நூல். இது தான் இவரின் முதல் நுால். 1999 ல் வெளியிடப்பட்டது.
*மலர துடிக்கும் அரும்புகள்- புதுகவிதை நுால்
* ஒருவாய் சோறு சிறுகதை
*அனைவரும் விரும்பும் அறிவு கதைகள்
*கார்க்கில் நிதி
*தாலி ஒரு வேலி
*துயர் தீர்த்தாய் தோழி
*ராசாத்தி உனக்காக
*மாறி போனவள்
*குப்பையில் ஒரு கோமேதகம்
*பாதை மாறிய பைங்கிளி
*பொன் விளையும் பூமி
*தேடி வருவேன் தேவதையே
*தேடிக்கண்ட உறவு
*குற்றமற்றவள்
*மணல் கோபுரம்
*எல்லா மதமும் சம்மதமே
*அழகு தமிழுக்கு ஆலயம்
*யார் செய்த குற்றம்
*என் மனைவியின் சொல்லை கேட்டிருந்தால்
*விடிஞ்சா வாக்கு பதிவு
*மறைவாய் போன மனிதம்
*சீனத்துப்பட்டும் ஒமி கிரான் தொற்றும்
*போலி நட்பு
*பதவி இருப்பினும் பணிவு வேண்டும்
உட்பட 30 புத்தகங்கள்.
இவைகள் பெரும்பாலும், சமூக அக்கறைக்காக எழுதப்பட்டவை. நேரில் காணும் காட்சிகளின் சம்பவங்களே புத்தகமாகி உள்ளதாக பெருமிதம் கொள்கிறார்.