UPDATED : பிப் 26, 2025 12:00 AM
ADDED : பிப் 26, 2025 07:41 PM
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழநாயக்கர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் மணி. நிலம்பூர் போச்சப்பாறையில் வசித்து வந்த இவர், வனப்பகுதியில் கடந்த மாதம் யானை தாக்கி உயிரிழந்தார்.
இவரது இளையமகள் மீனாட்சி, 12. மாற்றுத்திறனாளி. தந்தை மணி இறந்ததை அடுத்து, வனப்பகுதியில் இருந்து அரசு வழங்கியுள்ள விருந்தினர் இல்லத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
மீனாட்சி சார்ந்த பழங்குடியினர் பேசும் மொழி மலையாளம் மற்றும் கன்னடம் கலந்தது. இந்த மொழி பேசுவோர் அடர்ந்த வனத்தின் மையப்பகுதியில் வசிப்பதால், தற்போது மீனாட்சி குடும்பத்தினர் அந்த மொழியை யாருடனும் பேச முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், இந்த சிறுமியின் படிப்பை எஸ்.எஸ்.கே., எனப்படும், சமக்ரா சிக் ஷா கேரளா என்ற திட்டம் வாயிலாக செயல்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் வாயிலாக, வீட்டில் இருந்தபடி 6,168 பேர் படிக்கின்றனர். இதையடுத்து சிறுமி மீனாட்சி படிப்பதற்காக அவரது தாய்மொழியில் 30 ஆடியோ புத்தகங்களை கேரள கல்வித்துறை தயாரித்து உள்ளது.
இந்த புத்தகங்களை கொண்டு மீனாட்சியின் வீட்டுக்கு ஆசிரியைகள் நேரடியாக சென்று, அவருக்கு பாடம் கற்பிக்கின்றனர்.