UPDATED : ஏப் 23, 2025 12:00 AM
ADDED : ஏப் 23, 2025 11:00 AM
சென்னை:
சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குனரகத்தை நேற்று, பல்வேறு ஊர்களிலிருந்து வந்த கவுரவ விரிவுரையாளர்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை, போலீசார் தடுப்புகளை அமைத்து உள்ளே செல்ல விடாமல் தடுத்து வெளியேற்றினர்.
பின், அங்கிருந்து மெரினா காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை முற்றுகையிட வந்தனர். அங்கும், போலீசார் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைத்திருந்தனர்.
செமஸ்டர் தேர்வுக்காக மாநிலக்கல்லுாரி நுழைவாயில் திறந்து இருந்ததால் அங்கு நுழைந்த கவுரவ விரிவுரையாளர்கள், அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். சம்பவம் அறிந்துவந்த திருவல்லிக்கேணி போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, சமூக நலக்கூடத்தில் தங்கவைத்தனர்.
அப்போது, தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை, தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

