UPDATED : ஜன 19, 2026 10:22 AM
ADDED : ஜன 19, 2026 10:24 AM

சென்னை புத்தகக்காட்சி வெளி அரங்கில், சமீபத்தில் நடந்த நிகழ்வில், 'அகமும் புறமும்' எனும் தலைப்பில், திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது:
கடந்த கால சம்பவங்களை தற்கால தலைமுறை அறிய உதவுபவை புத்தகங்கள் தான். பல ஆண்டுகளுக்குமுன் வெளியான பழைய பராசக்தி படத்தின் பின்னணி, சுவாரசிய சம்பவங்கள் குறித்து வெளிவந்துள்ள புத்தகத்தை படிக்கும் போது வியப்பாக உள்ளது. அதில், திரைப்பட பாடலாசிரியர் காமாட்சி சுந்தரத்தின் பின்புலக் கதையை குறிப்பிட்டுள்ளது. அதை வாசிக்கும் போது, ஆச்சரியம் ஏற்படுவதுடன், அவர்களது தவறுகளில் இருந்தும் நம்மால் பாடம் படிக்க முடிகிறது.
பிரபல எழுத்தாளர் தி. ஜானகிராமனின் 'சங்கீத சேவை' கதையில், 'தெரியாததை தெரிந்தது போல காட்டிக்கொண்டு அவமானப்படக்கூடாது' என்பதை மிகவும் நகைச்சுவையாக கூறப்பட்டு உள்ளது. படிக்கும்போது, சிறந்த அனுபவத்தை எது தருகிறதோ, அதுவே சிறந்த இலக்கியம்.
தனித்தனி மனிதர்களை துாண்டி, அவர்களே படித்து, உணர்ந்து, சிந்திக்க வைப்பது தான் சிறந்த இலக்கியம். வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களை புத்தகங்கள் நமக்கு தருகின்றன. ஆகவே, புத்தகப் வாசிப்பு என்பது, வாழ்க்கை அனுபவத்தை படிப்பதாகவே அமைகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

