UPDATED : ஏப் 14, 2026 06:19 PM
ADDED : ஏப் 14, 2026 06:21 PM

திருப்பூர்:
ரோட்டரி திருப்பூர் தெற்கு சங்கம், ஒமேகா ஈவண்ட்ஸ் ஆகியோர் சார்பில், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் நேற்று நடந்தது.
கண்காட்சியை முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு துவக்கி வைத்து பேசுகையில், 'வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் தன்னம்பிக்கை முக்கியமானது; கல்வி தான் அழிக்க முடியாத சொத்து.
இது ஒன்று தான், நம்மை வாழ்க்கையில் முன்னேற செய்யும். இளம் பருவத்தில் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி, நமது இலக்கை நோக்கி ஓட வேண்டும். இந்த வயதில் சிரமப்பட்டால், பின்னால் வாழ்க்கை நன்றாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் கவனங்களை செலுத்தாமல் படிப்பில் கவனம் இருக்க வேண்டும்' என்றார்.
கண்காட்சியில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி பொறியியல், கலை, அறிவியல், பார்மசி மற்றும் டெக்னிக்கல் கல்லுாரிகள் பங்கேற்றன. திருப்பூர் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர். உயர்கல்வி குறித்து விசாரித்து சென்றனர்.

