UPDATED : ஏப் 17, 2026 07:33 PM
ADDED : ஏப் 17, 2026 07:35 PM
வால்பாறை:
கோடை கால விடுமுறை நாட்களில் நேரத்தை வீணடிக்காமல் நுாலகங்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நேற்று முழு ஆண்டு தேர்வுகள் நிறைவடைந்தன. இதனை தொடர்ந்து இன்று (17ம் தேதி) தேதி முதல் மே 31ம் தேதி வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை கால விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் நிறைவு நாளான நேற்று வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் பேசியதாவது:
கோடை கால விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஆறு மற்றும் அணைப்பகுதியில் மாணவர்கள் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். காலை, 10:00 மணி முதல் மாலை, 04:00 மணி வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அருகில் உள்ள நுாலகங்களில் பொதுஅறிவு சார்ந்த நுால்களை படிக்கலாம்.
மாலை நேரங்களில் பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடினால் உடலும், உள்ளமும் நன்றாக இருக்கும். குறிப்பாக, மாணவர்களின் சிந்தனைகள் சிதறாமல் இருக்க மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதை மாணவர்களின் பெற்றோர்கள் நாள் தோறும் கண்காணப்பது மிக அவசியம்.
இவ்வாறு, பேசினார்.

