UPDATED : ஏப் 24, 2026 12:11 PM
ADDED : ஏப் 24, 2026 12:14 PM

புதுச்சேரி:
மத்திய கல்வி அமைச்சகத்தின் என்.சி.இ.ஆர்.டி., மற்றும் தேசிய மதிப்பீட்டு மையமான பராக் இணைந்து, புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் மாணவர்களின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு குறித்த ஆய்வு துவங்கியது.
தேசிய கல்விக் கொள்கை 2020ன் அடிப்படையில், துவக்கக் கல்வியின் தரத்தை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும். வலுவான துவக்கக் கல்வியே நாட்டின் மனித வளத்திற்கு ஆதாரம் என்பதால், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 58 பள்ளிகள் இந்த ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு மூன்றாம் வகுப்பு முடித்து, தற்போது நான்காம் வகுப்பில் அடி எடுத்து வைத்துள்ள மாணவர்களிடம் இந்தத் திறன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் மூன்றாம் வகுப்பிற்குரிய குறைந்தபட்ச அடிப்படை எழுத்து மற்றும் கணக்குத் திறன்களைப் பெற்றுள்ளனரா என்பது குறித்து நேற்றும் இன்றும், மதிப்பீடு நடைபெறுகிறது.
புதுச்சேரியில் நடக்கும் இந்தத் தேசிய அளவிலான கணக்கெடுப்பினை, அரசு கல்வித்துறைச் செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாநில திட்ட இயக்குனர் எழில் கல்பனா, மற்றும் மாநில பயிற்சி மைய சிறப்பு அதிகாரி சுகுணா சுகிர்த பாய் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின் மூலம் திரட்டப்படும் தரவுகள் அடிப்படையில், மாணவர்கள் கற்றலில் எதிர்கொள்ளும் சிரமங்கள் கண்டறியப்படும். அதன் அடிப்படையில், மாநில அரசுகள் எடுக்க வேண்டிய கல்வி மேம்பாட்டு முடிவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கும். இதற்கான ஏற்பாடுகளை மாநில பயிற்சி மையம் மற்றும் சமக்ர சிக்ஷா அதிகாரிகள் செய்திருந்தனர்.

