மாணவருக்கான நலத்திட்டங்களை இழுத்தடிக்காமல் வழங்குங்க!
மாணவருக்கான நலத்திட்டங்களை இழுத்தடிக்காமல் வழங்குங்க!
UPDATED : மே 01, 2026 10:32 AM
ADDED : மே 01, 2026 10:33 AM
மதுரை:
அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளி திறந்து 10 நாட்களுக்குள் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசு, உதவிபெறும் தொடக்க கல்வியில் 16 வகை, உயர், மேல் நிலையில் 21 வகை அரசு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து வகுப்பிலும் முதல்நாளில் புத்தகங்கள் வழங்கப்படும்.
அதையடுத்து சில நாட்களில் முதல் செட் சீருடை, நோட்டுகள் வழங்கப்படும். அடுத்தடுத்து பேக், ஷூ, ஷாக்ஸ், அட்லஸ், கணித உபகரண பெட்டி, ரெயின்கோட் என பல்வேறு கட்டமாக வழங்கப்படுகின்றன.
கடந்தாண்டு புத்தக பை, அட்லெஸ், இரண்டாம் செட் சீருடை போன்றவற்றை கல்வியாண்டு கடைசியில் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. நோட்டு, புத்தகம் கொண்டு செல்வதற்காக தான் பேக் வழங்கப்படுகிறது. ஆனால் அதுவும் தாமதமாக கிடைப்பதால் வேறுவழியின்றி பெற்றோர் விலை கொடுத்து பேக் வாங்கி கொடுக்க வேண்டியுள்ளது.
இது குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:
பள்ளி திறந்தவுடன் அனைத்தும் மாணவருக்கு கிடைத்தால் தான் பயனுள்ளதாக இருக்கும். அரசு ஒப்பந்தமும் அப்படி தான் உள்ளது. ஆனால் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது.
நலத்திட்ட வினியோகத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த மாட்டோம் என தெரிவித்தாலும் பல மாவட்டங்களில் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை மறைமுகமாக 'லோடுமேன்' போல் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். பள்ளி திறந்து 10 நாட்களுக்குள் அனைத்து திட்டங்களும் கிடைக்கும் வகையில் திட்ட வினியோகத்தை அரசு ஒழுங்கு படுத்த வேண்டும் என்றார்.

