மேல்நிலை துணை தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மேல்நிலை துணை தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : மே 18, 2026 03:12 PM
ADDED : மே 18, 2026 03:16 PM
புதுச்சேரி:
மேல்நிலை துணைத் தேர்வுகளில் பங்கேற்க தனித் தேர்வர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள மேல்நிலை துணைத் தேர்வில் பங்கேற்க, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதன்படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாதோர், வருகை புரியாதோர் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத, அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று இன்று (18 ம் தேதி) முதல் 30ம் தேதி வரை, காலை 11:00 மணி முதல் 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதே போல், தனித்தேர்வர்கள், முத்திரையர்பாளையம், முத்திரையர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சேவை மையத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வு கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணத்தினை சேவை மையம் அல்லது பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் தேர்வர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு, பாஸ்போர்ட் போட்டோ 2, எடுத்து வர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித் தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
