UPDATED : மே 18, 2026 03:17 PM
ADDED : மே 18, 2026 03:17 PM
உடுமலை:
பள்ளி விடுமுறை முடிந்து ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 2026 - 2027ம் கல்வியாண்டு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க, ஒரு லட்சத்து, 4 ஆயிரத்து 254 புத்தகங்கள் திருப்பூருக்கு தருவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்காக, பள்ளிகளில் இறுதியாண்டுத்தேர்வு முடிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டது. ஜூன், 1ல் பள்ளிகள் திறக்க கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் 2026 - 27ம் கல்வியாண்டுக்கு தேவையான புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான புத்தகங்கள், நஞ்சப்பா பள்ளி மற்றும் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.
துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான புத்தகங்கள் குப்பாண்டம்பாளையம் பள்ளியிலும், நோட்டுக்கள் மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்துக்கு இது வரை, ஒரு லட்சத்து, 4 ஆயிரத்து, 254 புத்தகங்கள், துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, 68 ஆயிரத்து, 763 புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. மே, 25ம் தேதி முதல் வகுப்பு வாரியாக அனைத்து புத்தகங்களையும் பிரித்து அடுக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜூன், 1ல் பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை வழங்கப்படும்,' என்றனர்.
