எதிர்காலத்தை ஒளிர செய்யும் பாலிடெக்னிக் படிப்புகள்
எதிர்காலத்தை ஒளிர செய்யும் பாலிடெக்னிக் படிப்புகள்
UPDATED : ஜூன் 10, 2026 01:48 PM
ADDED : ஜூன் 10, 2026 01:55 PM

இன்றைய வேலைவாய்ப்பு சந்தையில், தொழில்துறைக்குத் தேவையான திறன்கள் மற்றும் செய்முறை அறிவு கொண்ட இளைஞர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டிப்ளமா படிப்புகள்
பொதுவாக, 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மூன்று ஆண்டு கால டிப்ளமோ படிப்பில் சேர முடியும். மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. செய்முறை பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், மாணவர்கள் தொழிற்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடிகிறது.
டிப்ளமோ முடித்த மாணவர்கள் 'லேட்ரல் என்ட்ரி' முறையின் மூலம் நேரடியாக பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டில் சேர முடியும். இதன் மூலம் நேரமும் செலவும் குறைவதுடன், தொழில்நுட்ப அறிவும் மேம்படுகிறது.
வேலை வாய்ப்புகள்
உற்பத்தி தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், மின்சாரத் துறைகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் டிப்ளமோ பட்டதாரிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தானியங்கி உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், ரோபோட்டிக்ஸ், இண்ட்ஸ்ட்ரி 4.0 போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
அரசுத் துறைகளிலும் பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. ரயில்வே, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, பாதுகாப்புத் துறை, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் டிப்ளமோ தகுதியுடன் பணியிடங்களை அறிவித்து வருகின்றன. வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், தொழில் முனைவோர்களாகவும் பாலிடெக்னிக் மாணவர்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
''இ.சி.இ., இ.இ.இ., படித்தால் செமிகண்டக்டர் நிறுவனங்களில் உடனடியாக வேலை கிடைக்கும். ஆங்கில தொடர்பியல் திறனை வளர்த்துக்கொள்வது மிகச் சிறந்த வாய்ப்புகளுக்கு வித்திடும். குறிப்பாக, மாணவிகளுக்கு வாய்ப்புகள் ஏராளம்'' - மீனாட்சி சுந்தரம், தொழில்துறை வல்லுனர்.
