UPDATED : மார் 02, 2011 12:00 AM
ADDED : மார் 02, 2011 05:22 PM
தேசிய நாடகப் பள்ளியின் விரிவாக்கக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு இடங்களில் 5 தேசிய நாடகப் பள்ளி மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று மத்திய கலாச்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் குமாரி செல்ஜா இன்று தெரிவித்து உள்ளார்.
தேசிய நாடகப் பள்ளியின் மையங்கள் அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. பெங்களுரு (தேசிய நாடகப்பள்ளி அல்லாமல் புதியது) கொல்கத்தா, மகாராஷ்டிரா அல்லது கோவா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகள் புதிய மையங்கள் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன என்றார் அமைச்சர்.
தமிழ்நாட்டில் இது போன்ற மையத்தை அமைக்க வேண்டும் என்று எந்த பரிந்துரையும் வரவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் செல்ஜா இந்த தகவலை வெளியிட்டார்.
பெங்களுருவில் உள்ள நாடகப் பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. புதிய மையங்களுக்கான இட வசதியை அந்தந்த மாநிலங்கள் தான் செய்து தர வேண்டும். அதற்குரிய இடங்கள் கிடைத்ததும் புதிய மையங்கள் துவங்கும் என்றும் குமாரி செல்ஜா கூறினார்.
