UPDATED : மார் 10, 2011 12:00 AM
ADDED : மார் 10, 2011 10:22 AM
"பட்டம் பெறும் மாணவர்கள், சிறந்த தொழில் முனைவோராக, உற்பத்தியாளர்களாக உயர்ந்து, இந்திய நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்,&'&' என, கோவை அண்ணா பல்கலை துணை வேந்தர் கருணாகரன் பேசினார்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியின், 6வது பட்டமளிப்பு விழா நடந்தது. கோவை அண்ணா பல்கலை துணை வேந்தர் கருணாகரன் மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கி, பேசியதாவது: கடந்த, 2006ம் ஆண்டு, 2.30 லட்சம் பேர் இன்ஜினியர் பட்டம் பெற்றனர். ஆனால், இன்ஜினியர்களாக சில ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
ஆட்டோ மொஃபைல் இன்ஜினியரிங், கெமிக்கல், டெலிகாம், கம்யூனிகேஷன் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே, தொழில் நுட்ப திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமைகள் மூலமாக தான், வேலை வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும்.
வரும், 2012ல் அறிவு சார்ந்த வேலைவாய்ப்புகள், 60 மில்லியன் அளவுக்கு கிடைக்கும் என, புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதுவே, 2016ல், 1.6 பில்லியானாக உயரப்போகிறது என கருதப்படுகிறது. தயாரிப்பு மற்றும் வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய தரமான, அறிவுத்திறனை வெளிப்படுத்தும் விதமாக, பொருட்களை உருவாக்கி நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.
பட்டம் பெறும் மாணவ, மாணவியர், சிறந்த தொழில் முனைவோராக, உற்பத்தியாளர்களாக உயர்ந்து, இந்திய நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
