தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலை ஆசிரியர்களின் இடைநில்லா போராட்டம்: 16 ஆண்டு கால பிரச்னை தீர்வு காண்பாரா முதல்வர்

இடைநிலை ஆசிரியர்களின் இடைநில்லா போராட்டம்: 16 ஆண்டு கால பிரச்னை தீர்வு காண்பாரா முதல்வர்

இடைநிலை ஆசிரியர்களின் இடைநில்லா போராட்டம்: 16 ஆண்டு கால பிரச்னை தீர்வு காண்பாரா முதல்வர்


UPDATED : மே 18, 2026 11:04 PM

ADDED : மே 18, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 11:04 PM ADDED : மே 18, 2026 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
பள்ளி கல்வித்துறையில் 'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு 16 ஆண்டுகளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னைக்கு முதல்வர் விஜய் தீர்வு காண்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் 6வது ஊதியக் குழுவில், ஜூன் 01, 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியருக்கு கடைநிலை ஊழியர் பெறும் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ஜூன் 01, 2009க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் அடிப்படை சம்பளம் ரூ.8370 என்றும், ஒரு நாளுக்கு பின் சேர்ந்தவருக்கு ரூ.5200 எனவும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த முரண்பாடு, 'ஒரே பணி ஒரே கல்வித் தகுதி' இருந்தால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானது என பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், இப்போராட்டத்தில் பங்கேற்று 'தி.மு.க., ஆட்சியில் தீர்வு காணப்படும்' என வாக்குறுதி அளித்தார்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெற்ற நிலையில் தி.மு.க., ஆட்சியில் தீர்வு காணப்படவில்லை. போராடிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் முந்தைய கல்வி அமைச்சர் மகேஷூக்கு எதிராக ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக கொதித்தெழ, அது தேர்தலில் எதிரொலித்தது.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:

இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க தி.மு.க., ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மூன்று நபர் குழு இது வரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

16 ஆண்டுகளாக போராட்டம் நடத்துவதுடன் பல ஆயிரம் சம்பளத்தையும் ஆசிரியர்கள் இழந்துள்ளனர். அவர்களின் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. 2009ல் பணியில் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் எந்த பலனும் அடையாமல் ஓய்வு பெற்றுவிட்டனர்.

முதல்வர் விஜய், ஆசிரியர்கள் மீது நன்மதிப்பு வைத்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து 16 ஆண்டுகால சம்பள முரண்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us