ராஜா ரவி வர்மாவின் ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று சாதனை
ராஜா ரவி வர்மாவின் ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று சாதனை
UPDATED : ஏப் 03, 2026 07:25 PM
ADDED : ஏப் 03, 2026 07:27 PM
மும்பை:
மஹாராஷ்டிராவில் நடந்த ஏலத்தில், நம் நாட்டின் தலைசிறந்த ஓவியரான ராஜா ரவி வர்மா வரைந்த யசோதா - கிருஷ்ணர் ஓவியம், 167.2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில், பிரபல ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை படைப்புகள் நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டன.
'சாப்ரான் ஆர்ட்ஸ் ஸ்பிரிங் லைவ் ஆக்ஷன்' என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான பழங்கால ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
தத்ரூபம்
இதில், நம் நாட்டின் பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பின், ஒவ்வொரு படைப்பாக ஏலம் விடப்பட்டன.
ராஜா ரவி வர்மா, கலைப் பயணத்தின் உச்சியில் இருந்த போது, 1890ல் மஹாபாரத கதாபாத்திரங்களான, யசோதா - கிருஷ்ணர் ஆகியோரை வைத்து தீட்டப்பட்ட படைப்பும் இந்த ஏலத்தில் இடம்பெற்றது.
'ஆயில் பெயின்டிங்' எனப்படும் எண்ணெயினால் ஆன வண்ணங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தில், பசு ஒன்றிடம் யசோதா பால் கறக்கும் போது, குழந்தை கிருஷ்ணர் பின்னால் இருந்து அவரிடம் பால் கேட்கும் அழகான காட்சி தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண நிகழ்வை, தெய்வீக தன்மையாக மாற்றும் ரவி வர்மாவின் கலைத் திறன் இந்த ஓவியத்தில் வெளிப்பட்டதை அடுத்து, இந்த ஓவியம் 80 - 120 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அரிய படைப்பு
இறுதியில், இந்த ஓவியம் 167.2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. நம் நாட்டின் பிரபல தொழிலதிபரும், 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் உரிமையாளருமான சைரஸ் பூனாவாலா, இந்த ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த தேசிய சொத்தை வாங்கியது, எனக்கு கிடைத்த கவுரவம் மட்டுமல்ல; கடமையும் கூட. இந்த அரிய படைப்பை அவ்வப்போது பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர நான் பல முயற்சிகளை எடுப்பேன்,” என்றார்.
கடந்தாண்டு நடந்த இந்திய கலைப்பொருள் ஏலச் சந்தையில், எம்.எப்.ஹுசைனின் ஓவியம் 118 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு, ராஜா ரவி வர்மாவின் இந்த ஓவியம் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த ஒரு தனி நபர் சேகரிப்பில் இருந்த யசோதா - கிருஷ்ணர் ஓவியம், தற்போது பூனாவாலா வசமாகியுள்ளது.
இவர் தான் ராஜா ரவி வர்மா!
கேரளாவில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கிளிமானுார் ராஜ குடும்பத்தில் பிறந்தவர் ராஜா ரவி வர்மா. இந்திய ஓவிய கலையில், 'ஆயில் பெயின்டிங்' பயன்பாட்டை பிரபலப்படுத்திய முன்னோடி இவர். இந்திய கடவுள்களின் உருவங்களை சாமானிய மக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்ற பெருமையும் ராஜா ரவி வர்மாவையே சாரும். இவரது ஓவியங்கள், இன்றும் இந்திய கலை உலகின் விலை மதிப்பற்ற பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன.

