அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு 19 ஐதராபாத் மாணவர்கள் தவிப்பு
அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு 19 ஐதராபாத் மாணவர்கள் தவிப்பு
UPDATED : டிச 23, 2015 12:00 AM
ADDED : டிச 23, 2015 10:58 AM
இதுபற்றி, ஐதராபாத்தில், ஏர் இந்தியா விமான சேவை அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, கலிபோர்னியா மற்றும் வடமேற்கு பாலிடெக்னிக் பல்கலை, சான்ஜோஸ் நகரில் உள்ள சிலிகான் வேலி பல்கலை என்ற, இரு கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, இந்தியாவில் இருந்து, 14 மாணவர்கள் சென்றனர்.
அக்கல்வி நிறுவனங்களில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களால், கறுப்புப்பட்டியலில் அவற்றை வைத்திருப்பதாக கூறி, அமெரிக்க அரசு அதிகாரிகள், 14 மாணவர்களையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். இந்நிலையில், 19ம் தேதி, அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், சர்ச்சைக்குரிய இரு கல்லுாரிகள் தொடர்பாக விசாரணை நடப்பதால், அக்கல்லுாரிகளில் சேர வரும் இந்திய மாணவர்களை, அமெரிக்காவிற்குள் அனுமதிக்காமல், உடனே திருப்பி அனுப்பி வருவதாக கூறப்பட்டு இருந்தது.
எனவே, அக்கல்லுாரிகளில் சேருவதற்காக, ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து, ஏர் இந்தியா விமானங்களில் செல்லவிருந்த, 19 மாணவர்களை தடுத்து நிறுத்தி விட்டோம். அவர்களுக்கு தேவையற்ற பணச் செலவு, காலவிரயம் ஏற்படுவதை தடுக்கவே, இந்த நடவடிக்கையை எடுத்தோம்.
இம்மாணவர்களின் விமான பயணத்துக்கான முழு கட்டணத்தையும், எவ்வித பிடித்தமும் இல்லாமல் திருப்பி அளிக்க, ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இவ்வாறு ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடப்பதாகவும், கறுப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படும் தகவல்களை, அமெரிக்காவை சேர்ந்த, சர்ச்சைக்குரிய இரு கல்வி நிறுவனங்களும் மறுத்துள்ளன.
