பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20ம் தேதி வெளியீடு
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20ம் தேதி வெளியீடு
UPDATED : மே 19, 2026 03:54 PM
ADDED : மே 19, 2026 03:55 PM

சென்னை:
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 11ம் தேதி முதல் துவங்கி நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் எழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக முதல்வர் விஜய்யுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
மேலும், கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதியும், பிற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், புதிய பாடத்திட்ட அடிப்படையில் தயார் செய்யப்பட்ட 1 முதல் 3ம் வகுப்பு பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பயன்படுத்தி, www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் 78452 52525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தங்களது முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைபேசி எண்களுக்கு மெசேஜ் வழியாகவும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
