UPDATED : அக் 22, 2009 12:00 AM
ADDED : அக் 22, 2009 11:38 AM
தமிழக அரசு குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தை 1991ல் இருந்து செயல்படுத்துகிறது. இதில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பிலும், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு இயக்கம் சார்பிலும் சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலம் 40 க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 25 மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு, குறைந்தபட்சம் மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது.
விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மே மாதம் முதல் நிதி வழங்கப்படவில்லை. இதனால், பலசரக்கு பாக்கி, ஆசிரியர் சம்பளம், மாணவர்களுக்கு உதவித்தொகை வரை வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு, அரசு நிதி வழங்கும் என காத்திருந்த ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, இதுவரை கடனுக்கு வழங்கிய பலசரக்கு கடைகள் பொருட்களை நிறுத்தும் நிலைக்கு வந்து விட்டது.
இதுகுறித்து திட்ட இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்காலிகமாக மீட்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நிதியிலிருந்து வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதுவும், தற்காலிகமாக பலசரக்கு பாக்கி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மட்டுமே வழங்க முன் வந்துள்ளனர். ஆசிரியர்களுக்கு மாதம் வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியமான 1,500 ரூபாய் மே மாதம் முதல் வழங்கப்படவில்லை. இதனால், சிறப்பு பள்ளிகள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அரசு நடவடிக்கை எடுத்து, நிதி வழங்க முன் வர வேண்டும்.
