UPDATED : மே 14, 2024 12:00 AM
ADDED : மே 14, 2024 11:07 AM

திருப்பூர் :
இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ள மக்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுத்தருகிறோம் என்கிறார் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி.
இன்றைய சூழலில், மாணவ சமுதாயத்தினர் மத்தியில், தமிழ் கற்பதில் ஆர்வம் குறைந்து வருகிறது. நடந்து முடிந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கூட தமிழ் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றவர்கள் மிக சொற்பம்.
இந்நிலையில், தமிழை வளர்க்க மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி, இணைய வழியில் பயிற்சி வழங்குகிறார்.
அவர் நம்மிடம் கூறியதாவது:
கடந்த மூன்றாண்டாக, MyTamilGuru என்ற 'ஆன்லைன்' தமிழ்ப்பள்ளியை கடந்த மூன்றாண்டாக நடத்தி வருகிறோம். இதன் உதவியுடன், இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேஷியா என பல நாடுகளில் இருந்தும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்றுள்ளனர்.
தமிழை எழுத, பேசுவதற்கு கற்றுக் கொள்ள, அனா, ஆவன்னா, தமிழ் இலக்கணம் குறித்த பார்வைக்கு, தேமதுரத் தமிழோசை, சிறுவர்களுக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்த பிள்ளைத்தமிழ் என, நான்கு வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, 8 முதல், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, தமிழை எழுதவும், படிப்பதற்கும் கற்றுக் கொடுக்க இளவேனில் என்ற சிறப்பு வகுப்பை நடத்தி வருகிறோம். அடுத்த மாதம், ஜூன் 4ம் தேதி வரை இப்பயிற்சி வழங்குகிறோம்.
இந்த கோடை விடுமுறையில் தமிழுடன் கழிக்க, mytamilgurugmail.com என்றஇ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.