UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:42 AM

சென்னை:
தமிழகம் முழுதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கான விடுதியில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இதற்கான நிபந்தனைகளின்படி, மாணவரின் ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், தற்போது பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
கடந்த ஓராண்டுக்குள் இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பலர் விண்ணப்பித்தும் உரிய ஆவணங்கள் வழங்காமல் உள்ளனர்.
இந்நிலையில், நாளை மாணவர்களை தேர்வு செய்வதற்காக, மாவட்ட கமிட்டி கூட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.
எனவே, அம்மாணவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க, அவகாசம் தர வேண்டும் என, பெற்றோர் மற்றும் விடுதி காப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

