UPDATED : நவ 14, 2025 09:19 AM
ADDED : நவ 14, 2025 09:22 AM

தர்யாகஞ்ச்:
என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை சட்ட விரோதமாக தயாரித்து, கள்ளச்சந்தையில் விற்கும் மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புத்தகங்களாக அச்சிட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குகிறது.
இந்த புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., அனுமதி இல்லாமல் அச்சிட்டு வணிக ரீதியில் வினியோகிப்பது, பதிப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. அந்த வகையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் தர்யாகஞ்ச் பகுதியில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு மொத்தம் 12,755 சட்டவிரோத என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக யமுனா விஹாரைச் சேர்ந்த கனிஷ்க், 32, ப்ரீத் விஹாரைச் சேர்ந்த வினோத் ஜெயின், 65, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கனிஷ்க், டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்பதும், அவருக்கு முந்தைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அதே நேரத்தில் 12ம் வகுப்பு வரை படித்த வினோத் ஜெயின், கடந்த ஆண்டு இதேபோன்ற வழக்கில் தொடர்புடையவர் என்று தெரிய வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

