UPDATED : ஏப் 15, 2026 07:10 PM
ADDED : ஏப் 15, 2026 07:11 PM
தார்வாட்:
அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அனுமதியின்றி போராட்டம் நடத்த முயற்சித்த 10க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்ததால், போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
தார்வாட் மாவட்டத்தில் ஏராளமான போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் இருக்கின்றன. இங்குள்ள பயிற்சி மையங்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்கள் பல்வேறு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பக்கோரி கடந்த பிப்ரவரியில் போராட்டம் நடத்தினர்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் உருவ பொம்மைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. எதிர்க்கட்சி தலைவர் அசோக் நேரில் சென்று மாணவர்களுக்கு ஆதரவு அளித்தார்.
இதற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர் போராட்டத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என அசோக்கிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். இதையடுத்து, மாவட்ட கலெக்டரின் பேச்சுக்கு பின், போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், அம்பேத்கர் ஜெயந்தியான நேற்று மாணவர்கள் நகரின் மையப்பகுதியான ஜெயநகர் சதுக்கத்தில் போலீசாரிடம் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இது குறித்து, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், நேற்று அதிகாலை முதல் நகரில் போலீசார் குவிக்கப்பட்டனர். வழக்கமாக, மாணவர் கூடும் இடங்களில் போலீசார் தங்கள் வாகனங்களி ல் வட்டமடித்தனர். அப்போது, ஜெயநகர் சதுக்கத்தில் கொடியுடன் வந்த மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பின், ஒலிபெருக்கியில், 'அனுமதியின்றி போராட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். அப்படி செய்வோர் கைது செய்யப்படுவர். மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதனால், மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணாக்கிக் கொள்ள வேண்டாம்,' என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து, போராட திட்டமிட்டிருந்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.

