UPDATED : ஏப் 20, 2026 10:55 PM
ADDED : ஏப் 20, 2026 10:58 PM

கோவை:
சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள், கோவை மாவட்ட புத்தக காப்பு மையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புதிய கல்வியாண்டு
ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், புத்தகங்களை அச்சிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் நடக்கின்றன.
கோவை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தன.
அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியான பின், அருகருகே உள்ள பள்ளிகளுக்கேற்ப 10 முதல் 13 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு, லாரிகளில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் முன், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

