UPDATED : ஏப் 22, 2026 12:12 PM
ADDED : ஏப் 22, 2026 12:14 PM

1968ம் ஆண்டில் பி.கே.தாஸ் அவர்களால் நிறுவப்பட்ட 'நேரு கல்வி நிறுவனங்கள்' உயர்கல்வித் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. தற்போது, தமிழகம் மற்றும் கேரளாவில் பள்ளிகள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை இக்குழுமம் உள்ளடக்கியுள்ளது.
கலை பிரிவுகளை சேர்ந்த மாணவர்களில் ஆண்டுதோறும் 80 முதல் 90 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். சில நிறுவனங்கள் ஆண்டுக்கு 10 லட்சம் வரை ஊதியம் வழங்குகின்றன. இத்தகைய சூழல், வேலைக்குத் தகுதியானவர்களாக கலைப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களை ஏற்றுக்கொள்வதையும், பொறியியல் துறையில் மட்டுமல்லாமல், மற்ற துறைகளிலும் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளதையும் பிரதிபலிக்கிறது.
எங்கள் கல்வி நிறுவனங்களில், கலை மற்றும் அறிவியல் துறைகளில் 25க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. குற்றவியல் மற்றும் தடயவியல் போன்ற சிறப்பு படிப்புகளும் வழங்கப்படுகின்றன. கலை மாணவர்களையும், உற்பத்தி துறையில் பிரகாசிக்க வைக்க பேராசிரியர்களின் உதவியுடன் தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உதாரணமாக, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறையில், மாணவர்கள் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதேபோல், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் துறையில், மாணவர்கள் தோல் மற்றும் முடி தொடர்பான பொருட்களை உருவாக்குகிறார்கள். இத்தகைய முயற்சி இளம் வயதிலேயே தொழில்முனைவு ஆர்வத்தைத் தூண்டுகிறது.
தகவல்கள் எளிதில் கிடைக்கும் இன்றைய சூழலில், மாணவர்கள் எந்த அளவிற்கு தகவல்களை நேர்மறையான வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிக நேரமும் மொபைலில் மூழ்கி உள்ளதால், பல மாணவர்கள் கவனச்சிதறல்களை எதிர்கொள்கின்றனர். இது தோல்விகளை எதிர்கொள்வதில் உணர்ச்சி எளிதில் வசப்படுவதற்கும், கடும் சிரமத்திற்கும் வழிவகுக்கிறது.
கற்றலுக்காகவும், மாணவர்கள் பெரும்பாலும் மொபைலை மட்டுமே சார்ந்துள்ளனர். சில மாணவர்களே நூலகங்களுக்கு செல்வதாலும், புத்தகங்கள் வாங்குவதாலும் வாசிப்பு பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.
'சாட்ஜிபிடி' போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதுவது, கல்வி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. பாடத்திட்டமும், மதிப்பீட்டு முறைகளும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. நேர்மையான முறையில் 'சாட்ஜிபி'டியை பயன்படுத்த மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
- டாக்டர் பி. கிருஷ்ண குமார், சி.இ.ஒ., மற்றும் செயலாளர், நேரு கல்வி நிறுவனங்கள்.
krishnakumar.p@nehrucolleges.com

