UPDATED : மே 06, 2026 02:02 PM
ADDED : மே 06, 2026 02:02 PM
கோவை:
பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையில் மலைசுற்றுலாத் தளங்களான நீலகிரி, ஏலகிரியில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
நீலகிரியில் மாணவிகளுக்கும், ஏலகிரியில் மாணவர்களுக்கும் என இரு பிரிவுகளாக, ஐந்து நாட்கள் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் பங்கேற்க, தமிழகம் முழுவதும் 205 மாணவர்களும், 690 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்கள், 18 மாணவிகள் முகாமில் பங்கேற்கின்றனர்.
கடந்த கல்வியாண்டில் 11ம் வகுப்பு முடித்த, கல்வி, இலக்கியம் மற்றும் அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் மே 19 முதல் 24ம் தேதி வரை நடக்கும் முகாமில், உடற்பயிற்சி, செய்தித்தாள் வாசித்தல், இசை, நடனம், மேடைப்பியற்சி, கவிதை மற்றும் கதை எழுதுதல், மென்திறன்கள், சமூகத்திறன்கள் மற்றும் இளம் அதிகாரிகளுடன் சந்திப்பு போன்ற பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
