UPDATED : மே 08, 2026 08:31 AM
ADDED : மே 08, 2026 08:32 AM
மேட்டுப்பாளையம்:
வேளாண் பல்கலை ஆராய்ச்சி மாணவிக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
அமெரிக்காவில், 'சியாட்டல் இந்தியா டீம்' சமூக சங்கம் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள, திறமையான மாணவிகளை தேர்வு செய்து, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
திட்டத்தின் வாயிலாக, தகுதியான மாணவிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கும் போது, பொருளாதார காரணங்களால் ஏற்படும் கல்வி இடைநிற்றலை தவிர்த்து, உயர்கல்வியை தொடர ஊக்கப்படுத்தி வருகிறது.
நடப்பாண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் மாணவி கிருஷ்ணப்பிரியாவுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது. அண்ணாமலை பல்கலை தகவல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் துறை உதவி பேராசிரியர் ஜெய்பிரகாஷ் வழங்கினார்.
சமூக ஆர்வலர் ஜெயராமன், மிதிலாலயம் அறக்கட்டளையின் தலைவர் மைதிலி ஆகியோர் பங்கேற்றனர். கல்வி உதவித்தொகை பெற்ற கிருஷ்ணப்பிரியா, இந்தியா டீம் சியாட்டின் தலைவர் தேவராஜ் முத்துக்குமாரசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

