UPDATED : ஜூலை 03, 2026 07:36 PM
ADDED : ஜூலை 03, 2026 07:41 PM

புதுடெல்லி:
பட்டயக் கணக்காளர் நிறுவனமான ஐ.சி.ஏ.ஐ., கடந்த மே 2026ல் நடத்திய சி.ஏ., பவுண்டேஷன் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 20.09 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இம்முறை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து நாசிக் நகரைச் சேர்ந்த சாக்ஷி ஜெயின் என்ற மாணவி சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு 371 மதிப்பெண்கள் (92.75%) பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, சந்திராப்பூர் பகுதியைச் சேர்ந்த அயனப்பாஸ் அஜானி 367 மதிப்பெண்களுடன் (91.75%) இரண்டாம் இடத்தையும், புனேவைச் சேர்ந்த ராதா உன்மேஷ் முலே 365 மதிப்பெண்கள் (91.25%) பெற்று மூன்றாம் இடத்தையும் தன்வசப்படுத்தியுள்ளனர்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மொத்தம் 609 தேர்வு மையங்களில் இந்த மே மாதத்திற்கான சி.ஏ., பவுண்டேஷன் தேர்வுகள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டன.
இத்தேர்வெழுத மொத்தம் 1 லட்சத்து 06 ஆயிரத்து 144 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 90 ஆயிரத்து 217 பேர் தேர்வில் பங்கேற்றனர். அதில் 18 ஆயிரத்து 124 மாணவர்கள் தகுதி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.
மேலும், டாப் ரேங்க் பெற்ற மாணவர்களிடையே மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசமே உள்ளதால், இந்த ஆண்டு போட்டி மிகவும் கடுமையாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் ஐ.சி.ஏ.ஐ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் பதிவு எண் மற்றும் ரோல் நம்பரை உள்ளிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
