UPDATED : டிச 08, 2010 12:00 AM
ADDED : டிச 09, 2010 04:56 PM
சில மாதங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட 6வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அடிப்படையில் பொதுவாக பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வின்படி, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் அதே விதியை அமல்படுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவை அடுத்து, சம்பாதிப்பதற்காகவே, தனிநபர்களால் நாடுமுழுதும் தொடங்கப்பட்ட பள்ளிகள் அதிர்ச்சியுற்று, பெற்றோர்களை மேலும் அதிகமாக சுரண்ட ஆரம்பித்தன. இதுப்பற்றி நாடெங்கும் பல புகார்கள் வந்தபோதும், முறையான நடவடிக்கைகள் இல்லை. இந்த சூழலில்தான் டெல்லி விவகாரம் வெடித்துள்ளது.
கடந்தமாதம் இறுதி செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையின்படி, தலைநகர் டெல்லியில் உள்ள 25 பிரபல தனியார் பள்ளிகள் (அந்த பள்ளிகளின் கணக்கு-வழக்குகள் சி.ஏ.ஜி. -ஆல் தணிக்கை செய்யப்பட்டவை), தங்களின் ஆசிரியர்களுக்கு பரிந்துரையின்படி கூடுதல் சம்பளம் வழங்க பெற்றோர்களிடம் வசூலித்த தொகையை சம்பளத்திற்கு பயன்படுத்தாமல், அதை டிரஸ்டுகளுக்கும், சொசைட்டிகளுக்கும் திருப்பிவிட்டுள்ளன.
மேலும் அந்த பள்ளிகள், தங்களிடம் உள்ள சேமிப்பு தொகையை, கூடுதல் சம்பளம் வழங்கவோ மற்றும் வேறு முக்கிய செலவுகளுக்கோ பயன்படுத்தவில்லை.
இதைத்தவிர, பல பள்ளிகள் வைப்புநிதி விஷயத்தில் குறைந்தளவு பணியாளர்களுக்கே பங்களித்திருந்த அதேவேளையில், அமிட்டி இன்டர்நேஷனல் போன்ற சில பள்ளிகள், வைப்புநிதி விஷயத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் பொருட்டு, தங்களிடம் பணியிலேயே இல்லாத ஊழியர்களுக்கெல்லாம் வைப்பு நிதி பங்களிப்பை செய்ததாக பொய் கணக்கு காட்டியுள்ளன.
மேலும் இத்தகைய பள்ளிகள், சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற டெல்லி அரசின் பள்ளி கல்வி சட்டத்தையும் மதிக்கவில்லை. இத்தகைய மோசடிகளை கண்டுகொள்ளாமல் இருந்த டெல்லி கல்வி இயக்குநரகத்தை சி.ஏ.ஜி. வன்மையாக கண்டித்துள்ளது.
