மாநில திறன் தேர்வர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்த்த வலியுறுத்தல்
மாநில திறன் தேர்வர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்த்த வலியுறுத்தல்
UPDATED : அக் 23, 2024 12:00 AM
ADDED : அக் 23, 2024 10:44 AM
தேனி :
மத்திய அரசின் தேசிய திறனறித்தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாநில அரசின் டிரஸ்ட் தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் மட்டும் வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்க பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச்செயலாளர் சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
தேனியில் அவர் கூறியதாவது: மத்திய அரசு 8 ம்வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய அளவில் தேசிய திறனறித்தேர்வு நடத்துகிறது. இதில் தேர்வாகும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் என 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை வழங்குகிறது. ஒவ்வொரு மாணவரும் இந்த தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 48 ஆயிரம் உதவித்தொகை பெறுகின்றனர். இந்த தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் 6695 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்
அதே நேரம் தமிழக அரசு சார்பில் கிராமப்புற மாணவர்கள் திறன் தேடல்(Trust) தேர்வு 9ம் வகுப்பு அரசுபள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலம் ஒவ்வொரு மாவட்டதிற்கும் தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ. ஆயிரம் உதவித்தொகை என 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகையும் காசோலையாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கே அவர்கள் ஆண்டிற்கு ரூ.200 வரை செலவு செய்யும் நிலை உள்ளது.
இந்த தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு மாநில அரசு உதவித்தொகை மாதந்தோறும் ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிகல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என்றார்.