நுாறு நாள் வாக்குறுதியை 4 ஆண்டாகியும் நிறைவேற்றாத முதல்வர்
நுாறு நாள் வாக்குறுதியை 4 ஆண்டாகியும் நிறைவேற்றாத முதல்வர்
UPDATED : மார் 21, 2025 12:00 AM
ADDED : மார் 21, 2025 09:19 PM

மதுரை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும், நுாறு நாட்களில் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மதுரையில் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்று அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எங்களுக்காக குரல் கொடுத்து பேசினார். அதை நம்பி அவருக்கு வாக்களித்தோம். ஆட்சிக்கு வந்தபின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடத்தினார்.
அதில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அந்த முகாமிலும் நாங்கள் மனு அளித்தோம். அப்போது மயிலாடுதுறையில் நடந்த முகாமில், ஸ்டாலின் என்ற ஆசிரியரிடம் முதல்வர் பேசுகையில், அந்த ஸ்டாலின் கோரிக்கையை இந்த ஸ்டாலின் நிறைவேற்றித்தருவான் என்றார். ஆனால் 4 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேறவில்லை.
தற்போது ரூ.12,500 என்ற குறைவான அளவில் ஆண்டிற்கு 11 மாதங்கள் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது. 14 ஆண்டு களாக பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகிறோம். கடைசி பட்ஜெட்டிலும் அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றமடைந்தோம்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து 2024 வரை தாக்கலான பட்ஜெட்டுகளில் கல்வித்துறைக்கு ரூ.1,53,827 கோடியும், 2025 பட்ஜெட்டில் ரூ.46,767 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு எவ்வித பயனுமில்லை. தற்போது 12 ஆயிரம் பேர் தான் உள்ளோம். காலமுறை சம்பளம் வழங்க ரூ.300 கோடி தேவை. 110 விதியின் கீழாவது எங்கள் கோரிக்கையான பணிநிரந்தரம், அடிப்படை சம்பளம் ரூ.20,600 நிர்ணயம் அறிவிப்பு வெளியிட வேண்டும், என்றார்.