தமிழ் புதல்வன் திட்டத்தில் 91 கல்லுாரியில் 9,012 மாணவர்கள்
தமிழ் புதல்வன் திட்டத்தில் 91 கல்லுாரியில் 9,012 மாணவர்கள்
UPDATED : ஆக 13, 2024 12:00 AM
ADDED : ஆக 13, 2024 08:34 AM
ஈரோடு:
அரசு சார்பில் உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கையை உயர்த்த மாணவியருக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அது-போல, தமிழ் புதல்வன் திட்டத்தில் அரசு பள்ளியில் படித்து, கல்லுாரி படிக்கும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை கோவையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதன்படி, ஈரோடு, அரசு பொறியியல் கல்லுாரியில் நடந்த துவக்க விழாவில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திட்டத்தை துவக்கி வைத்து, வங்கி பற்று அட்டையை மாணவர்களுக்கு வழங்கி பேசியதாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், பெண்கள் கல்வி கற்கும் சதவீதத்தை உயர்த்த, 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் திருமணத்துக்கு, அவர்களது பெற்றோருக்கு மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டம், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என பெயர் மாற்றம் செய்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி படிக்கும்போது, தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் வழங்க அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், 91 கல்லுாரிகளில் படிக்கும், 9,012 மாணவர்க-ளுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு பேசினார்.
மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மாவட்ட பஞ்., தலைவர் நவமணி, சமூக நலத்துறை அலுவலர் சண்முகவடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.