UPDATED : ஜன 15, 2009 12:00 AM
ADDED : ஜன 16, 2009 02:30 PM
பிளஸ் 2 மாணவர்களைப் பொறுத்தவரை இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் அவர்களது எதிர்காலம். பெரும்பாலான வீடுகளில் படிப்பைப் பொறுத்தவரை அது பிள்ளைகளுக்கு மட்டுமான பொறுப்பு என்று நினைக்கின்றனர். அவர்களது நடவடிக்கைகளும் அதையொட்டியே அமைகின்றன.
‘இந்த முறை நீ நன்றாக படிக்கவில்லை என்றால், மாடு மேய்க்க போக வேண்டியதுதான்’ என்று சொல்லும் பெற்றோர்களை சாதாரணமாக பார்க்கிறோம்.
‘நாங்கள் அவ்வளவாக படிக்கவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது... உன் வாழ்க்கையை நீயே பார்த்துக் கொள்’ என்று கூறிவிட்டு ‘டிவி’ மெகா தொடரில் மூழ்குவோரும் உண்டு.
பொதுத் தேர்வுக்கு பிள்ளைகள் தயாராகும் போது, பெற்றோர்களும் அதை தவமாக கருதி, அவர்களுடன் சேர்ந்து அந்த முயற்சிக்கு உதவ வேண்டும். பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கும்போது, ‘டிவி’ நிகழ்ச்சியில் குடும்பத்தார் அனைவரும் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பதும், அந்நிகழ்ச்சியைப் பற்றி பேசி அரட்டை அடிப்பதும், படிக்கும் மாணவரின் கவனத்தை சிதறடிக்கும். ‘உனக்கென்ன நீ... படிக்க வேண்டியதுதானே. நாங்கள் சத்தத்தை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறோம்’ என்று சமாதானம் சொல்வோரையும் நாம் சாதாரணமாக பார்க்கிறோம்.
பிள்ளைகள் புத்தகத்தை தூக்கியவுடன் ‘டிவி’ முன் அமரும் பெற்றோர்கள் அதிகரித்து வருகிறார்கள். பிளஸ் 2 பாடங்களை எல்லா பெற்றோர்களாலும் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே, பிள்ளை என்ன படிக்கிறான் என்பதையும் அது தொடர்பாக விவாதிக்கவும் எல்லோராலும் முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோராக இருந்தால் கூட, நம் பிள்ளை அக்கறையாக படிக்க வேண்டுமே என்று கருதி, உண்மையான விருப்பத்துடன் அருகில் இருந்து ஒரு ‘டீ’ தயாரித்துத் தருவது கூட, பெற்றோரின் அக்கறையை பிள்ளைகளை உணர செய்யும்.
தேர்வு முடிந்த பின்னர், மாநில அளவில் முதல் மதிப்பெண், மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்து சாதிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், ‘உங்கள் பிள்ளை சாதித்ததன் ரகசியம் என்ன’ என்று கேட்கும் போது, அவர்கள் கூறும் ஒரே பதில், ‘கடந்த ஓர் ஆண்டாக, பிள்ளைகளைத்தான் கண்ணும் கருத்துமாக பார்த்தோம், ‘டிவி’ பார்க்கவில்லை’ என்பதுதான்.
பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
* ‘டிவி’ என்பது வீட்டில் பயன்படுத்தாத பொருளாக மாற வேண்டும். இது மாணவரின் கடைசி நேர ‘ரிவிஷன்’ செய்ய உதவும்.
* சிலருக்கு ‘ரிவிஷன்’ செய்வது பிடிக்காது. ஆகவே, அதை தவிர்க்க முயற்சி செய்வார்கள். தேர்வுக்கு தயாராவோருக்கு ‘ரிவிஷன்’ முக்கியம் என்பதை எடுத்துரைத்து அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வையுங்கள்.
* பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கும் போது, கோபம் மற்றும் பயம் ஆகியவற்றை காண்பிக்கக் கூடாது. இது அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்கும்.
* படிக்கும் பிள்ளைகளை கவனித்து வாருங்கள். மிக அதிகமாக படித்து களைப்படைவது போல் தெரிந்தால் கொஞ்சம் ஓய்வு எடுக்க சொல்லுங்கள். படிக்கும் போது, அவ்வப்பபோது இடைவெளி விட்டு படிக்க செய்வது அவர்கள் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும்.
* காபி அருந்துவதற்கு பதிலாக ‘பால்’ குடிக்க சொல்லலாம். புரோட்டீன் நிறைந்த தானியங்கள் மற்றும் பருப்புகளை இடையில் அளிக்கலாம். இடையில் கொஞ்சம் டிபன் அளிக்கலாம். நிறைய தண்ணீர் கொடுக்கலாம்.
* படிக்கும் பிள்ளைகள் அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது குறைவாக சாப்பிட்டாலோ அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆகவே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து அவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ள வேண்டும். அதையும் மீறினால் நல்ல ஆலோசகர்களிடம் பிள்ளைகளை கூட்டிச் சென்று பார்க்கலாம். இதற்கு பள்ளிகளையே நாடலாம்.
* மாணவர்கள் ‘ரிலாக்சாக’ இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வெறும் பாடப்புத்தகங்களையே படித்துக் கொண்டிருக்காமல், செய்தித்தாள்கள் படிக்க அல்லது மென்மையான மியூசிக் கேட்பதை மகிழ்ச்சியுடன் அனுமதிக்கலாம். சிறிய வயதிலிருந்து செய்தித்தாள்களை வாசிக்க சொல்வது பிள்ளைகள் படிக்கும் ஆர்வத்தை தூண்டும். அவர்களின் பொது அறிவை வளரச் செய்து, மூளையை சுறுசுறுப்பாக்கும்.

