கல்வி கட்டணம் 10 சதவீதம் உயர்வு; சென்னை பல்கலை சிண்டிகேட் முடிவு
கல்வி கட்டணம் 10 சதவீதம் உயர்வு; சென்னை பல்கலை சிண்டிகேட் முடிவு
UPDATED : ஏப் 03, 2026 07:20 PM
ADDED : ஏப் 03, 2026 07:25 PM
சென்னை:
சென்னை பல்கலை முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கான கல்வி கட்டணம், 22 ஆண்டுகளுக்கு பின், 10 சதவீதம் உயர்த்த, சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நுாற்றாண்டுகள் பழமையான சென்னை பல்கலை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதே நேரம், பேராசிரியர்கள் பதவி உயர்வு, பேராசிரியர்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் குறைபாடு என, பல்வேறு பிரச்னைகளும் உள்ளன.
விவாதம்
இந்நிலையில், நிதி நிலையை மறுசீரமைக்க, பல்கலை வளாகத்தில் இயங்கும், 88 முதுநிலை பட்டப்படிப்பு துறைகளின் கல்வி கட்டணத்தில் திருத்தம் செய்ய நிதித்துறை, பல்கலைக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதியது.
அந்த கடிதத்தின் அடிப்படையில், முதுநிலை மாணவ, மாணவியருக்கான கல்வி கட்டணத்தை உயர்த்திட, பல்கலை முடிவு செய்து, அதற்கான வரைவு அறிக்கை தயார் செய்தது.
இந்நிலையில், சென்னை பல்கலை சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலை வளாகத்தில் நடந்தது. உயர்கல்வித் துறை செயலர் சங்கர் உட்பட, பல்கலை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கல்வி கட்டணம் உயர்த்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கடந்த 22 ஆண்டுகளாக, கல்வி கட்டணம் உயர்த்தப்படாததால், நிதிநிலையை சீராக்க, பல்கலை வளாக துறைகளின், கல்வி கட்டணத்தை, 10 சதவீதம் உயர்த்த சிண்டிகேட் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுயநிதி படிப்புகளுக்கான, கல்வி கட்டணத்தை, 15 சதவீதம் வரை உயர்த்தவும், அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டணங்களை, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மாற்றி அமைக்கவும், சிண்டிகேட் குழு ஒப்புதல் கொடுத்துள்ளது.
ஒப்புதல்
மேலும், பல்கலை வளாகத்தில், சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கான கட்டணத்தை, 2.50 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், படப்பிடிப்பு வாகனங்கள் நிறுத்தத்துக்கான கட்டணம், 50,000 ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு, டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சென்னை பல்கலையின் கீழ் செயல்பட்டு வந்தது.
தமிழக அரசின் உயர்கல்வித் துறை அரசாணைப்படி, சென்னை பல்கலை அங்கீகாரத்தை விலக்கி, 'வேல்ஸ்' நிகர்நிலை பல்கலையுடன் இணைத்துக் கொள்ள, சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
