சென்னையில் ஜன., 16 - 18ல் பன்னாட்டு புத்தக திருவிழா
சென்னையில் ஜன., 16 - 18ல் பன்னாட்டு புத்தக திருவிழா
UPDATED : டிச 10, 2025 08:00 AM
ADDED : டிச 10, 2025 08:01 AM

சென்னை:
பன்னாட்டு புத்தக திருவிழா, ஜன., 16, 17, 18ம் தேதிகளில், சென்னையில் நடக்க உள்ளது.
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நேற்று பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கான 'லோகோ' வெளியிட்டு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியதாவது:
நான்காவது பன்னாட்டு புத்தகத் திருவிழா, வரும் ஜன., 16 முதல் 18ம் தேதி வரை, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை, பள்ளிக்கல்வி துறை, பொது நுாலக இயக்குநரகம், தமிழ்நாடு பாடநுால் கழகம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
புத்தகங்களுக்கான காப்புரிமை மற்றும் வர்த்தக நோக்கில் நடத்தப்படும் இதில், சர்வதேச கருத்தரங்குகளும், இலக்கிய உரையாடல்களும் இடம்பெறும். பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் நேரடியாக தங்களின் வர்த்தகத்தை முன்னெடுப்பர். இதன் வாயிலாக கலாசார, இலக்கிய பரிமாற்றங்கள் நிகழும்.
இந்தாண்டு, 290க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்களும் பங்கேற்கும் வகையில், இந்த புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், மதிப்புறு விருந்தினராக ஒரு நாடு பங்கேற்கும். அந்த வகையில், வரும் புத்தகத் திருவிழாவில், ஜெர்மனியின் பிராங்பர்ட் புத்தகக் காட்சியின் ஒருங்கிணைப்பு குழு பங்கேற்க உள்ளது.
இதில் பங்கேற்க, htttps://chennaiinternational bookfair.com/ என்ற முகவரியில், முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

