கோவையில் வரும் 27ல் துவங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
கோவையில் வரும் 27ல் துவங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
UPDATED : மார் 22, 2026 12:16 PM
ADDED : மார் 22, 2026 12:19 PM
கோவை:
உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு நேரடித் தீர்வு காணும் விதமாக, கோவை கொடிசியா 'இ' அரங்கில், வரும் 27 முதல் 29ம் தேதி வரை 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி நடக்கிறது.
பிளஸ் 2 படிப்புக்கு பின் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோரின் சந்தேகங்களுக்கும் தீர்வு தரும் விதமாக 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஆண்டுதோறும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு, கோவையில் அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா 'இ' அரங்கில் வரும் 27 முதல் 29ம் தேதி வரை 'தினமலர் வழிகாட்டி 2026' நிகழ்ச்சி நடக்கிறது. இதில், 130க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகள், பல்கலை அரங்குகள் இடம்பெறுகின்றன.
நிகழ்ச்சியில், உயர்கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் எவை என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், உதவித்தொகை வாய்ப்புகள், உயர்கல்வியில் சமீபத்திய மாற்றங்கள் உட்பட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் நிபுணர்கள் தெளிவாக விளக்குகின்றனர்; அப்டேட்களையும் வழங்க உள்ளனர்.
புத்தம் புதிய படிப்புகளான ஏ.ஐ., ஆகுமென்ட் ரியாலிட்டி, பிக்டேட்டா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோஷியல் மீடியா, ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்ப படிப்புகள் குறித்தும், சிவில் சர்வீசஸ், கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், இன்ஜினியரிங், டிசைன், ஆர்க்கிடெக்சர், வேளாண்மை, மேலாண்மை என அனைத்து துறைகள், உட்பிரிவுகள் குறித்தும் நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.
மாணவர்கள் தங்களுள்ள சந்தேகங்களை, நிபுணர்கள், பேராசிரியர்களிடம் நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அரசு வேலைவாய்ப்புகள், 'நீட்' போன்ற தேர்வுகள் குறித்தும் தகவல்கள் வழங்கப்படுவது இந்நிகழ்வின் தனித்துவமாகும்.
கருத்தரங்கின் இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் போன்ற பரிசுகள் வழங்கப்படுகின்றன. காலை 10:00 முதல் மாலை 06:30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதி இலவசம்.
கரம் கோர்ப்பவர்கள்
வழிகாட்டி நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து வழங்குகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்தா விஸ்வ வித்யாபீடம், ஸ்ரீ சக்தி கல்வி நிறுவனம், ஸ்ரீ ஈஸ்வர் கல்வி நிறுவனம், கே.எம்.சி.எச்., மற்றும் என்.ஜி.பி., கல்வி நிறுவனம், கற்பகம் கல்வி நிறுவனம், ரத்தினம் கல்வி நிறுவனங்கள், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், ராஜலட்சுமி கல்வி நிறுவனம், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம், கே.எம்.சி., காலேஜ் ஆப் லா, யுனைடெட் கல்வி நிறுவனம், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரி உள்ளிட்டவை இணைந்து நடத்துகின்றன.
மாணவர்கள் ஒரே கூரையின் கீழ் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு நிபுணர்களிடம் தெளிவு பெற்று எதிர்கால கல்வியை தேர்வு செய்து கொள்ளலாம்.
