கரூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நீட் தேர்வு 96.02 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்பு
கரூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நீட் தேர்வு 96.02 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்பு
UPDATED : மே 05, 2026 09:48 PM
ADDED : மே 05, 2026 09:49 PM
கரூர்:
கரூர் மாவட்டத்தில், ஐந்து மையங்களில் நடந்த, 'நீட்' தேர்வில், 1,689 பேர் தேர்வு எழுதினர். அதாவது, 96.02 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை எனும் என்.டி.ஏ., நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு, நாடு முழுதும், 552 மையங்களில் நடந்தது.
இதன்படி, கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில், இரண்டு மையங்களில், 960 மாணவ, மாணவியர், கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 240 மாணவ, மாணவியர், கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 199 மாணவ, மாணவியர், கரூர் பசுபதிபாளையம் சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 360 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
மாவட்டத்தில், ஐந்து மையங்களில், 597 மாணவர்கள், 1,162 மாணவியர் என மொத்தம், 1,759 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில், 582 மாணவர்கள், 1,107 மாணவியர் என மொத்தம், 1,689 பேர் தேர்வு எழுதினர். அதில், 70 பேர் மட்டுமே தேர்வு எழுத வரவில்லை. இதன்படி, 96.02 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.
மதியம், 02:00 மணி முதல் மாலை, 05:20 மணி வரை அதாவது, 3 மணி நேரம், 20 நிமிடம் தேர்வு நடந்தது. ஒவ்வொரு வினாவுக்கும், 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது. இத்தேர்வு தமிழ் உள்ளிட்ட, 13 மொழிகளில் நடந்தது.
