நீட் தேர்வை 6 மையங்களில் 3219 பேர் எழுதினர் 141 பேர் ஆப்சென்ட்
நீட் தேர்வை 6 மையங்களில் 3219 பேர் எழுதினர் 141 பேர் ஆப்சென்ட்
UPDATED : மே 04, 2026 07:26 PM
ADDED : மே 04, 2026 07:28 PM
திண்டுக்கல்:
மாவட்டத்தில் 6 மையங்களில் நேற்று நடந்த நீட் நுழைவுத்தேர்வை 3219 மாணவர்கள் எழுதினர். 141 பேர் தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆகினர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. மாவட்டத்தில் திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, அண்ணமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்தி கிராம பல்கலை, சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி, கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் தேர்வு எழுத 3360 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
மதியம் 02:00 மணிக்கு துவங்கிய தேர்விற்கு காலையில் இருந்தே தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் குவிந்தனர். பகல் 12:00 மணிக்கு மையத்திற்குள் அனுமதி வழங்கி உள்ளே சென்ற மாணவிகள் மோதிரம், தோடுகளை அகற்றாமல் உள்ளே சென்றனர். போலீசார் அறிவுறுத்திய பின் நகைகளை கழட்டிவிட்டு பெற்றோரிடம் வழங்கி சென்றனர்.
பேனா கொண்டு வர வேண்டாம் என அடிக்கடி மைக்கில் தெரிவித்த வண்ணம் இருந்தனர். குடிநீர் பாட்டில் அனுமதிக்கப்பட்டது. தேர்வு 02:00 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடந்தது.
முன்னதாக பெற்றோர் அமர, ஓய்வு எடுக்க தேசிய தேர்வு முகமை முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் மரங்களின் நிழல், புதிய கட்டடங்கள், ரோட்டின் ஓரங்களில் கடும் வெயிலையை பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.
மாவட்டத்தில் 3219 பேர் தேர்வை எழுதிய நிலையில் 141 பேர் தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆகினர். கிழிந்து இருந்த ஓ.எம்.ஆர்., ஷீட் திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தாடிக்கொம்பு பள்ளி மாணவி ஒருவர் தேர்வு எழுதிவிட்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டுடன் விடைத்தாளை ஒப்படைத்தார்.
அந்த ஷீட் கிழிந்து உள்ளதாக தெரிவித்து மாணவியிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்று தேர்வு மையத்தின் பொறுப்பாளர், தேசிய தேர்வு முகமையின் பொறுப்பாளர் கையெழுத்திட்டு வைத்துவிட்டனர். ஆனால் மாணவி விடைத்தாள் வாங்கிய பொழுதே சீட் கிழிந்திருந்தது என தெரிவித்தார்.
அப்பெண்ணின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதற்கு எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க பொறுப்பாளர்கள் மறுத்துவிட்டனர். இது போல் மூன்று மாணவிகளின் விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட ஓ.ம்.ஆர்., சீட் கிழிந்தது குறித்து எழுத்துப்பூர்வ கடிதங்களை பொறுப்பாளர்கள் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியே வராத 23 பேர் கண்ணீர் விட்ட பெற்றோர்
எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 960 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தேர்வு முடிந்து வெளியே வந்தனர். 23 மாணவ, மாணவிகள் மட்டும் வெளியே வரவில்லை.
இதனால் கேட்டிற்கு வெளியே காத்திருந்த பெற்றோர் பிள்ளைகளுக்கு என்னானது என கண்ணீருடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் ஒரு தேர்வு அறையில் மட்டும் 23 மாணவிகள் எழுதி முடித்து மொத்தமாக வெளியே வந்ததால் பெற்றோர் பாசத்துடன் அவர்களை கட்டி அணைத்து அழைத்து சென்றனர்.
