இன்ஜினியரிங்: 28% இடங்களை ஆக்கிரமித்த வெளி மாநில மாணவர்கள்!
இன்ஜினியரிங்: 28% இடங்களை ஆக்கிரமித்த வெளி மாநில மாணவர்கள்!
UPDATED : செப் 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சிறுபான்மையினர் நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் சிறுபான்மையினர் அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களும் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பணக்கார மாணவர்களே அதிக அளவில் சேருவதாக புகார் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு புள்ளி விவரங்கள் இப்புகார் உண்மைதான் என்பதைக் காட்டுகிறது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 90 ஆயிரத்து 158 பேர் சேர்ந்துள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 78 ஆயிரத்து 847 பேர் (87.45%) வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 11 ஆயிரத்து 321 பேர் (12.55%)
கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கவுன்சிலிங் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்கள் 53 ஆயிரத்து 437 பேர். இந்த கவுன்சலிங் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த 3,736 பேர் போக, மீதமுள்ள 40 ஆயிரத்து 701 பேர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு வெளி மாநில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 52 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டன. 11 ஆயிரத்து 321 இடங்களில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வெளி மாநில மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில்49 ஆயிரத்து 701 இடங்கல் அரசு ஒதுக்கீட்டிலும் 40 ஆயிரத்து 467 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் என மொத்தம் 90 ஆயிரத்து 168 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்ட 40 ஆயிரத்து 467 இடங்களில் 11 ஆயிரத்து 467 (27.85%) வெளி மாநில மாணவர்களே சேர்ந்துள்ளனர்.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிக அளவில் நன்கொடை வசூலிக்கப்படுவதும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பணக்கார மாணவர்கள் பெரும் தொகையை நன்கொடையாகக் கொடுத்தும் அதிகக் கட்டணம் செலுத்தியும் தமிழக தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள பிற மாநில மாணவர்கள் பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.