எஸ்.டி., மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு தேவையா?: அரசுக்கு நோட்டீஸ்!
எஸ்.டி., மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு தேவையா?: அரசுக்கு நோட்டீஸ்!
UPDATED : செப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியின் சொந்த மாநிலமான கேரளத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளோம். ஆனால் பொது நுழைவுத் தேர்வில் 40 சதவீத்திற்கு மேல் மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. கோச்சிங் மூலம் படிக்க வசதி இல்லாததால் நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. எனவே, நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேர அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முடியுமா என்பதை மத்திய அரசிடம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் கூறியுள்ளது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ.,) மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லாமல் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுபோன்ற நிவாரணத்தை பழங்குடியின மாணவர்களுக்கும் வழங்க முடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டும். அதுபோன்று வழங்கினால் பழங்குடியின மாணவர்கள் முன்னேற முடியும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டில் அகில இந்திய அடிப்படையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் பழங்குடியினருக்கான (எஸ்.டி.,) 51 இடங்களில் 2 இடங்கள் மட்டுமே எஸ்.டி., மாணவர்களுக்குக் கிடைத்தது. எஸ்.டி., மாணவருக்கான மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவினருக்கு மாற்றப்பட்டது என்பதும் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
