பள்ளிக் குழந்தைகளின் பாடமூட்டை எடையை குறைக்க சி.பி.எஸ்.இ, அதிரடி!
பள்ளிக் குழந்தைகளின் பாடமூட்டை எடையை குறைக்க சி.பி.எஸ்.இ, அதிரடி!
UPDATED : ஜன 19, 2009 12:00 AM
ADDED : ஜன 19, 2009 12:22 PM
பள்ளிக் குழந்தைகள் தேவையற்ற பாடப்புத்தகங்களையும் நோட்டுகளையும் எடுத்து வருவதால், அவர்களின் ஸ்கூல் பேக் எடை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த சி.பி.எஸ்.இ., அதிரடி நடவடிக்கைகளை துவக்கி உள்ளது.
பள்ளிக் குழந்தைகளின், குறிப்பாக ஆரம்பக்கல்வி வகுப்புகளில் இருப்பவர்களின் ஸ்கூல் பேக் எடையை குறைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படி, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், வாரியத்தின் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேவையற்ற பாடப் புத்தகங்கள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படக்கூடாது; அந்த பாடங்களுக்கு ஏற்ற வகையில் டைம் டேபிளில் மாற்றம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வித்திட்டத்துடன், குழந்தைகளின் மென்திறனும் மேம்படும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப் பட வேண்டும். இதன் மூலம், ஸ்கூல் பேக் எடையை குறைக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கையில் இது தொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், குறிப்பிட்ட வகுப்பு குழந்தைகளுக்கு பரிந்துரைத்துள்ள பாடப்புத்தகங்களை விட, கூடுதல் எண்ணிக்கையில் எக்காரணம் கொண்டும் பாடப் புத்தகங்கள் அளிக்கப்படக்கூடாது. மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், கல்வி ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சுமை ஏற்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் பரிந்துரைக்கூடாது என்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இரண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள், புத்தகங்களை வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்துவிட்டால், அவர்கள் அந்த பாடத்துக்குரிய வகுப்பின்போது பயன்படுத்துவதற்காக, பள்ளிகளில் தனியாக நூலகம் அமைக்கப்பட வேண்டும். பிரதான பாடங்களை கற்றுக் கொடுப்பதுடன், மாணவர்களின் திறமையை வளர்க்கும் விதமான செயல்பாடுகளை கற்றுக் கொடுப்பதன் மூலம், புத்தகங்களின் எண்ணிக்கையையும், ஸ்கூல் பேக்கின் எடையையும் குறைக்க முடியும்.
வீட்டுப்பாடங்கள் அளிக்கும் போது, புத்தகங்களில் இருப்பதை எழுதுவது போன்றவற்றை மட்டும் அளிக்காமல், அதற்கு மாற்றாக குழந்தைகள் ஆர்வமாக செயல்முறையில் கற்கும் வகையிலான வீட்டுப்பாடங்களையும் அளிக்க வேண்டும். இரண்டையும் ஒன்று சேர்த்து, குழந்தைகளின் திறன் மதிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் ஆரம்பப்பள்ளி பாடப்புத்தகம் மேம்பாட்டு கமிட்டி தலைவரும், டில்லி பல்கலைக் கழக பேராசிரியருமான அனிதா ராம்பால் இது தொடர்பாக கூறியதாவது:
பள்ளிக் குழந்தைகளின் பாடப்புத்தகம், நோட்டுகள் சுமையை குறைப்பதற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். ஏராளமான தனியார் பள்ளிகள் தேவையற்ற பாடப்புத்தகங்களை வாங்கும்படி, குழந்தைகளையும், பெற் றோரையும் கட்டாயப்படுத்துகின்றன. சமீபத்தில் ஒரு புத்தகக் கடைக்கு சென்றிருந்தேன். அங்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்ட புத்தகங்களை கேட்டேன். கடைக்காரர் முழு செட்டையும் எடுத்துக் கொடுத்தார்.
அதைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். பாடப்புத்தகங்களை விட, நோட்டுப்புத்தகங்களின் எண்ணிக்கையும், விலையும் இரண்டு மடங்காக இருந்தது. இத்தனை எண்ணிக்கையில் நோட்டுப் புத்தகங்கள் தேவை தானா? இவற்றை சிறிய குழந்தைகள் தினமும் பள்ளிக்கு சுமந்து செல்லவேண்டியது அவசியம் தானா? தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் கொள்கைகள் தெளிவாக வகைப்படுத்தப்பட் டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு மொழிப் பாடமும், கணிதமும் மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆனால், பல சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமின்றி, கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளிலும் கூட அவர்களுக்கு சுற்றுச்சூழல் அறிவியல் பாடம் கற்றுத் தரப்படுகிறது. இந்த பாடத்துக்காக, புத்தகமும் பரிந்துரைக்கப்படுகிறது. இது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. இவ்வாறு ராம்பால் கூறினார்.
இதை பள்ளிகளும் வரவேற்று உள்ளன. குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் பரிந்துரைக்கப்படுவதற்கு பதிலாக, ஒர்க் ஷீட்கள் போன்று, வெறும் கோப்புகளில் சில தாள்கள் மட்டும் வைத்து எடுத்துவர செய்யலாம். வெறும் பாடங்களை கற்றுக் கொடுப்பதோடு, அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் வகையில், புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கலாம். இதற்காக தனி வகுப்புகளும் கூட நடத்தலாம் என்று டி.ஏ.வி., குழும பள்ளிகளின் இயக்குனர் கே.பி.குஷால் கூறினார்.
