UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM
ADDED : ஜூலை 27, 2009 01:02 PM
இதனால், ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குரோம்பேட்டை, பாரதிபுரத்தில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் பாரதி நடுநிலைப் பள்ளி துவங்கப் பட்டது. அரசு நிதி உதவி பெறும் இந்த பள்ளியில் 55 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். தற்போது, தனியார் பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டதால், இந்த பழமையான பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது.
பள்ளி நிர்வாகத்தினரோ, அப் பகுதி அரசியல்வாதிகளோ, கல்வித்துறை அதிகாரிகளோ இந்த பள்ளியை மேம்படுத்தவோ, மாணவர் சேர்க்கையை அதிகரிக் கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு மிகவும் குறைந்த அளவிலான மாணவர்களே படித்தனர். இதையடுத்து, இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி, பள்ளி இழுத்து மூடப்பட்டது. மேலும், 15 மாணவர்களுக்கு டி.சி., கொடுத்து, புருஷோத்தம்மன் நகரில் உள்ள வேறு ஒரு பள்ளியில் சேர்த்துவிடப்பட்டனர்.
மாணவர் சேர்க்கை குறைந்ததால், பள்ளி மூடப்பட்டதாக நிர்வாகம் காரணம் கூறும் நிலையில், பள்ளியை விற்பதற்கான முயற்சி நடப்பதாகவும், அதனால் தான் மாணவர் சேர்க்கை நடத்தாமல், பள்ளியை இழுத்து மூடியதாகவும் அப்பகுதி பொதுநல சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பாரதிபுரம் பொதுநலச் சங்கத்தினர் கூறியதாவது: ஆரம்பத்தில் துவக்கப் பள்ளியாக இருந்து, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. அரசு உதவியிலும், வியாபாரிகள் நலச்சங்கத்தினர் உதவியிலும் கட்டடங்கள் கட்டப்பட்டன.
இப்பகுதியில் வசிக்கும் பொரு ளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு ஒரு சில சுயநலவாதிகள் பள்ளியை விற்றுவிட தீர்மானித்து பள்ளியின் வளர்ச்சியை சுருக்கிவிட்டனர். இதனால், குழந்தைகளின் நலன் கருதி, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுநலச் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் இந்த புகார் குறித்து பள்ளி தாளாளர் பன்னீர் செல்வம், தலைமையாசிரியர் சிவகுமார் ஆகியோரிடம் கேட்டபோது, 2005ம் ஆண்டு இப்பள்ளியில் 210 மாணவர்கள் படித்தனர். ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வந்தது. இருந்த ஒரு சில ஆசிரியர்களுக்கும் சுயநிதியில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அருகில் தனியார் பள்ளிகள் அதிகம் இருப்பதால், பெற்றோர், மாணவர்களை அங்கு சேர்க்க துவங்கினர்.
இதனால், வகுப்புக்கு ஓரிரு மாணவர்கள் என்ற எண்ணிக்கையில் மட்டுமே கடந்த ஆண்டு படித்தனர். ஒரு கட்டத்தில் பெற்றோரே அந்த மாணவர்களின் மாற்று சான்றிதழை (டி.சி.,) பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
அரசும், தொண்டு நிறுவனங்களும், பொதுநல சங்கங்களும் இணைந்து பள்ளியில் மாணவர்களை சேர்க்க முன்வந்தால், தொடர்ந்து பள்ளியை நடத்த தயாராக உள்ளோம் என்றனர்.
