UPDATED : அக் 15, 2009 12:00 AM
ADDED : அக் 15, 2009 01:48 PM
மாணவர்கள், அவர்களின் ஆசிரியர், வகுப்பு தோழர்களுடன் உள்ள இணக்கம், பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அவர்களுக்கு கிரேடு வழங்க, சி.பி.எஸ்.இ., திட்டமிட்டு வருகிறது.இந்த திட்டத்தில், மாணவர்களின் நடத்தைகளை பொறுத்து ஏ பிளஸ், ஏ மற்றும் பி ஆகிய மூன்று கிரேடுகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து, மும்பையை சேர்ந்த ராஜ்கான்ஸ் வித்யாலயா என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் தீப்ஷிகா ஸ்ரீவத்சவா கூறுகையில், நடத்தைகள் அடிப்படையில் கிரேடு வழங்குவது என்பது உணர்வு சார்ந்தது. அது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். கிராமப்புறம் அல்லது சிறு நகரங்களை சேர்ந்த ஆசிரியர்கள், பெரிய நகரங்களை சேர்ந்த ஆசிரியர்களை காட்டிலும், வித்தியாசமான முறையில், மாணவர்களின் நடத்தைகளை ஆராய்வர். எனவே, நடத்தை அடிப்படையில் கிரேடு வழங்குவதற்கு அளவீடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றார்.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோருள் ஒருவரான நவி மும்பையை சேர்ந்த நமீதா என்பவர் கூறியதாவது:தனிக்குடும்பங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்பவராக உள்ளனர். அவர்களின் குழந்தைகள் பெரும்பாலும், யாருடனும் பழகாமல் ஒதுங்கியே இருப்பர்.
சி.பி. எஸ்.இ., பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், தங்கள் பெற்றோரின் வேலை மாற்றத்தால், மாநிலம் விட்டு மாநிலம் வந்து படிக்கின்றனர். அவர்கள் தங்களின் புதிய பள்ளியின் சூழலுக்கு ஒத்துப்போவது என்பது எளிதல்ல. இந்த நிலையில், ஆசிரியர்கள் சிலர் மென்மையாகவும், சிலர் கடுமையாகவும் நடந்து கொள்வர்.
எனவே, நடத்தையை வைத்து கிரேடு வழங்குவது என்பது சரியாக வராது.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், நடத்தை அடிப்படையில் கிரேடு வழங்குவது என்பது சிறந்த ஆய்வு என, இந்திய கவுன்சிலர்கள் கூட்டமைப்பு தலைவர் ஹரீஷ் ஷெட்டி தெரிவித்தார்.
