UPDATED : ஆக 08, 2009 12:00 AM
ADDED : ஆக 08, 2009 06:03 PM
மிக்கின்சி அறிக்கையின் படி, இந்தியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பொது சுகாதார அலுவலர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால் ஆண்டுக்கு 300 பேர் முதல் 400 பேர் வரை மட்டுமே இப்படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இத்தகைய பற்றாக்குறையினால் இப்படிப்பில் முதுகலைப்பட்டப்படிப்புகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. பிட்ஸ், பிலானி பொதுசுகாதாரத்துறையில் முதுகலைப்பட்டப் படிப்பினை வழங்குகிறது. இந்தியாவில் மருத்துவத்துறை பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருப்பினும், கிராமப்புறங்களில் சுகாதார வளர்ச்சி குறைவாகவே உள்ளது.
இதற்கு பிலானியில் உள்ள ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.எஸ்சி., (நர்சிங்) அல்லது அதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் இதில் சேர தகுதியானவர்கள்.
அகில இந்திய அளவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து இதில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சுகாதாரத்துறையில் பணிபுரிவோருக்கு இப்படிப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பிட்ஸ் பிலானியை தவிர புனே பல்கலைக்கழகமும், பஞ்சாப் பல்கலைக்கழகமும் இப்படிப்பை வழங்குகின்றன. புனே பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதன்முதலாக பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொது சுகாதாரப்படிப்பை வழங்குகிறது. அரசு சுகாதார மையங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்புபடுத்தி இதில் பாடத்திட்டங்கள் உள்ளன.
பயாலஜிக்கல், கிளினிக்கல் அண்டு சோஷியல் சயின்ஸ் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி., லைப் சயின்ஸ், பி.எஸ்சி., நர்சிங், பி.எஸ்சி., பார்மகாலஜி, பி.எஸ்சி., ஊட்டமுறை மற்றும் பி.ஏ., ஆந்த்ரபாலஜி, பி.ஏ., சோஷியாலஜி, சைக்காலஜி, எல்எல்பி., ஜோனலிசம், எம்.பி.பி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., மாஸ்டர் ஆப் சோஷியல் ஒர்க் போன்றவற்றை முடித்தவர்கள் பொது சுகாதாரம் படிப்பில் சேரலாம். மத்திய மற்றும் மாநில சுகாதார மையங்களிலும், மருத்துவமனைகளிலும், சர்வதேச அமைப்புகளிலும், அரசு சாரா நிறுவனங்களிலும் இப்படிப்பை முடித்தவர்கள் எளிதில் வேலை வாய்ப்புகளை பெறலாம்.
பொதுவாக திட்டங்களை மேம்படுத்துபவராகவும், திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் தொடக்கத்தில் இத்துறையை சேர்ந்தவர்கள் பணியாற்றலாம். சர்வதேச நிறுவனங்களில் தொடக்கத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளராகவோ, அல்லது நாட்டின் ஒருங்கிணைப்பாளராகவோ பணியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். இதற்கான கட்டணம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும். தொடக்க நிலையில் வருடத்திற்கு 4லட்சத்து 50 ஆயிரம் வரை சம்பளமாக பெறலாம்.
