அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது
அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது
UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 08:42 AM

கோவை:
கோவை, டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளி முன் பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, டிட்டோ - ஜாக் அமைப்பு சார்பில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில், வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, டிட்டோ-ஜாக் அமைப்பு சார்பில், பல்வேறு கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இந்த அரசாணையை மறுபரிசீலனை செய்வதாக, அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். இந்நிலையில், தற்போது 243 அரசாணையை நடைமுறைப்படுத்தும் வகையில், பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு பொதுமாறுதலை நிறுத்திவைக்க வேண்டும்.
பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைத்து, 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த பழைய நடைமுறையான ஒன்றிய அளவிலான முன்னுரிமை அடிப்படையில், கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஆசிரியர்கள் மாநில அளவில் நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை, டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளி முன், டிட்டோ-ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர்கள் வீராசாமி, அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.