மாநிலத்தில் 8,000 ஆசிரியர் பணியிடம் காலி; மாணவர் சேர்க்கைக்கு மட்டும் அரசு தீவிரம்
மாநிலத்தில் 8,000 ஆசிரியர் பணியிடம் காலி; மாணவர் சேர்க்கைக்கு மட்டும் அரசு தீவிரம்
UPDATED : மே 02, 2026 09:35 PM
ADDED : மே 02, 2026 09:37 PM

மாநிலம் முழுக்க, 8,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதில் மட்டும் அரசும், கல்வித்துறையும் முனைப்பு காட்டி வருவதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் நடத்தப்படவில்லை. 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிப்புரிய மற்றொரு போட்டித்தேர்வு நடத்துவதாக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு பின் பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதியில் அத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், அதுசார்ந்த தெளிவான வழிகாட்டுதல் வெளியிடவில்லை.
மேலும், புதிய ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தற்போது, 8,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், ஆசிரியர் காலியிடம் தொடர்வதால், கூடுதல் பணிச்சுமை நீடிப்பதாக ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கூறியதாவது:
ஐந்தாம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதத்திலும், ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு, 01:35 மற்றும் ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு 01:40 என்ற விகிதாசார அடிப்படையிலும், ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், காலியிடங்களால், தற்போது 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை நீடிக்கிறது.
ஆசிரியர் மாணவர் விகிதாசாரத்தை குறைக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். மாறாக, கூடுதல் மாணவர்களை கையாள வேண்டிய நிலையே நீடிக்கிறது. தமிழகம் முழுக்க, தற்போது 8,000 இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு, மேலும் 5,000 ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
தற்காலிக ஆசிரியர் நியமனமும், அரையாண்டு தேர்வுக்கு பிறகே நடத்தப்படுகிறது. இதனால் கடும் பணிப்பளு நீடிப்பதால், வரும் கல்வியாண்டிலாவது, காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு, சேர்க்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களை, கல்வியாண்டு துவக்கத்திலேயே நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
