UPDATED : அக் 17, 2024 12:00 AM
ADDED : அக் 17, 2024 10:20 AM

திருப்பூர் :
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில், நடந்த பதில் சொல்; பரிசை வெல் என்ற வினாடி - வினா போட்டியில், மாணவ, மாணவியர் பதில் சொல்லி அசத்தினர்.
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில், மாணவர்களின் கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலும், 2018 முதல், வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான வினாடி - வினா விருது, 2024 -'25 போட்டி, தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கை கோர்த்துள்ளது. சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி இடம் பெறுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இடையே, அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடத்தப்படும். இறுதி போட்டி யில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
நேற்று, திருப்பூர் தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதி சுற்றுக்கான போட்டியில், 49 பேர் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், எப் அணியில் இடம்பெற்ற, 8ம் வகுப்பு மாணவி நிலா, 7ம் வகுப்பு மாணவி ருத்ரா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜெயபாலன், பள்ளி முதல்வர் பாரதி, பொருளாளர் வரதராஜ், வினாடி - வினா ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை நித்யா உள்ளிட்டோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.